இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்

அழியாத அற்புதம்:

கடந்த தொடரில் கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா? என்பதை தீர்மானிப்பது ஆணின் விந்தணுதான் என்ற அறிவியல் ஆய்வின் முடிவினை தெரிந்து கொண்டோம். இந்தச் செய்தியினை அறிவியல் வாடை கூட இல்லாத அறியாமைக் காலம் என வர்ணிக்கப்பட்ட 1430 ஆண்டுகளுக்கு முந்திய காலத்திலேயே எழுதப்படிக்கத் தெரியாத உம்மி நபியான முஹம்மது (ஸல்) அவர்களின் மூலம் சொல்லப்பட்டு விட்டது. இந்தச் செய்தியினை எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, அவ்வாறு சொல்லப்பட்டிருப்பது உண்மைதானா? என்பதை இந்தத் தொடரில் ஆதாரத்தின் அடிப்படையில் தெரிந்து கொள்வோம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்று, ஏக இறைவனை மட்டுமே வழிபட வேண்டும் என்பதை ஏற்க மறுத்துக் கொண்டிருந்த அறியாமை காலத்து மக்களிடம், அவர் ஒரு இறைத்தூதர்தான் என நிரூபனம் செய்தவற்கு முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பல அற்புதங்களை அல்லாஹ் வழங்கி இருந்தான். அவ்வாறு அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்களிலேயே மிகச்சிறந்த பேரற்புதமாக விளங்குவது அருள் மறை குர்ஆனாகும். இதனை ஒரு அரபுக் கவிஞர் எல்லா அற்புதங்களையும் மிகைத்து, நம்மோடு காலமெல்லாம் நிலைத்து நிற்கும் பேரற்புதம் அருள் மறைக் குர்ஆன் ஆகும் என்று குறிப்பிடுகிறார்.

இலக்கணமும், இலக்கியமும் செரிந்த கருத்தாழமிக்க அதன் வசன நடை கண்டு அன்றைய பிறவிக் கவிஞர்களும் அதிசயித்துப் போனார்கள். உம்மி நபியினால் சொல்லப்பட்டது போல் நாமும் ஏன் எழுத முடியாது? என்று போட்டிக்கு நின்றவர்கள் கூட அதன் சொற்பிரயோகத்தில் சொக்கிப் போனார்கள். குர்ஆனின் ஒரேயொரு வசனத்தைப் போன்ற மாற்று வசனம் ஒன்றை உருவாக்கிட நீங்கள், விரும்புவோரையெல்லாம் கூட்டுக்கு அழைத்துக் கொண்டு முயன்றுபாருங்கள் என 1430 ஆண்டுகளுக்கு முன்னால் உம்மி நபியின் மூலம் இந்த உலகிற்கு எடுத்து வைக்கப்பட்ட அந்த சவால் இது வரைக்கும் யாராலும் எதிர் கொள்ள முடியாத சவாலாகவே இருந்து கொண்டிருப்பது அந்த குர்ஆன் இறைவேதம் என்பதற்கான அழியாத அடையாளமாகும். உலக அழிவு வரை அந்த சவாலை யாரும் எதிர்க் கொள்ள முடியாது என்பது வேறு விஷயம்.

ஏகத்துவப் பிரச்சாரம் ஏற்புடையதல்ல என்று ஏட்டிக்குப் போட்டியாக பேசித் திரிந்த, அடங்காத அட்டூழியங்களை அப்பாவி முஸ்லிம்களின் மீது தகாத முறையில் ஏவி விட்டு, அதனால் அவர்கள் படும் அவஸ்தையை கண்டு அளவிலா ஆனந்தம் அடைந்து வந்த, அறியாமையின் பிறப்பிடம் எனும் அடை மொழிக்கு சொந்தக்காரன் அபுஜஹில் கூட இருள் சூழ்ந்த இரவு நேரங்களில் இருளடைந்த கனத்த இதயத்துடன் இறைவேதம் ஓதப்படும் ஓசை வரும் திசை நோக்கி மெல்ல சென்று யாரும் அறியாத வண்ணம் ஒட்டுக் கேட்கத் தூண்டியதே! அது எது? குர்ஆன் வசனங்கள், மனித படைப்பாற்றலுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் வெளிப்பாடு என்பதை அவன் உணர்ந்து கொண்டதல்லவா?

மாற்றுக் கருத்து கொண்டிருந்த உமர் (ரலி) அவர்களின் மனதில் உள்ள விடயங்களை மாற்றிய வசனம்தான் மறக்க முடிகிறதா? கேட்கக்கூடாதென காதில் பஞ்சடைத்து கால் கடுக்க மக்கா வீதியிலேயே நடந்து திரிந்த துஃபைல்(ரலி) அவர்களை துக்கம் துறந்திட துள்ளிக் குதித்து தூய நபியின் பக்கம் செல்ல வைத்த சிறப்பினை இன்றைக்கும் படித்துப் பார்க்கிறோம். துஃபைல்(ரலி) அவர்களின் காதுப் பஞ்சு பறந்தது, அவரது செவிப்பறையில் அல்லாஹ் அருள் வசனம் புகுந்தது. அதனால் அவரது உள்ளமோ ஆனந்த ஆகாயத்தில் சிறகடித்துப் பறந்தது. இந்த நிகழ்வுகளெல்லாம் குர்ஆன் இருளடைந்த மனித மனங்களில் ஏற்படுத்திய பேரொளிப் புரட்சிகளின் வெளிப்பாடுகளில் சிலவைகள்தான். இன்னும் இது போல, அல்லது இதை விட வியத்தகு ஆச்சரியங்கள் நிறைந்த வரலாறுகள் ஏராளம் உண்டு.

உதாரணத்திற்குச் சொல்லப்பட்ட இவர்களை குர்ஆன் இறைமறைதான் என ஏற்க வைத்ததுதான் எது? அந்தக் காலத்தில் அறிவியல் உண்மைகள் உணரப்பட்டிருந்தனவா? இல்லை அறவே இல்லை. ஏன்? அதன் வாடையைக் கூட அவர்கள் நுகரவில்லை என்பது உலகமறிந்த உண்மை. எனவே, குர்ஆனில் இடம் பெற்றிருக்கும் அறிவியல் கருத்தால் அவர்கள் ஈர்க்கப்பட்டார்கள் என்று சொல்லமுடியாது. என்றாலும் இலக்கணமும், இலக்கியமும் அரபிகளின் உள்ளங்களை ஆட்சி செய்து கொண்டிருந்தது என்று சொல்வதை விட ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது என்றால் அது மிகப் பொருத்தமாக இருக்கும். அதனால் இலக்கிய சுவையும், கருத்துக் கோர்வையும் உள்ள கவிதைகள் அவர்களின் உயிரினும் மேலாக மதித்து வந்த கஃபாவின் சுவர்களில் தங்களுக்கும் ஓர் இடம் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தன. அந்த காலகட்டத்தில்தான் அனைத்து இலக்கிய காவியங்களையும் மிகைத்து நிற்கும், அனைத்து அரபிக் கவிஞர்களுக்கும் சவாலாக விளங்கும் குர்ஆன் ஒரு உம்மியின் மீது இறக்கியருளப்பட்டது. அதனை இல்லாமல் ஆக்க எதிரிகள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தார்கள். இறுதியில் தோற்றுப்போய், அதன் இலக்கியத்திற்கு முன் சரணடைந்து இஸ்லாத்தில் தஞ்சம் புகுந்து விட்டார்கள். அதனால் அழிவும், முடிவும் இல்லாத எல்லையில்லா ஆனந்தம் கரைபுரண்டோடும் சுவர்க்கத்தின் சுகத்தில் தஞ்சமானார்கள். அது அன்றைய சரித்திரம்.

அறிவியல் பார்வை:

இன்றோ இலக்கண-இலக்கிய உணர்வுகள் உறைந்து போய், அறிவியல் முதிர்ச்சியில் அலை மோதிக் கொண்டிருக்கும் மனித மனங்களை, குர்ஆன் தனது தீர்க்கமான அறிவியல் உண்மையால் வெற்றி கொண்டுள்ளது என்பதே சரியான உண்மையாகும். அதனால் குர்ஆனின் இலக்கியம் முக்கியத்துவம் இழந்து விட்டது என்று பொருளல்ல. மாறாக மக்களின் மனநிலை இலக்கியத்தில் திளைத்திருந்த காலம் மாறி, அறிவியல் பக்கம் பார்வை செலுத்தி அதற்கு அதி முக்கியத்துவம் வழங்கும் காலம் பிறந்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் குர்ஆன் கூறும் பல அறிவியல் உண்மைகள் புரிந்து கொள்ளப்பட்டு, பல விஞ்ஞானிகளும், அறிவியல் வல்லுனர்களும் குர்ஆன் ஒர் இறைவேதம்தான் என்று உறுதியாக சான்று பகர்ந்து இஸ்லாத்தில் இணைந்துள்ளார்கள். இதற்கான எடுத்துக் காட்டுகள் சமீபத்திய வரலாறுகளில் ஏராளம்! ஏராளம்! எனினும் அவர்களின் வரலாறு கூற இது பொருத்தமான இடமில்லை என்பதால் தவிர்த்துக் கொண்டேன்.

இன்றைய அறிவியல் உண்மைகள் குர்ஆனில் ஏராளமாக இடம் பெற்றுள்ளது என்பதை விளக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளோம். அந்த வகையில், கருவில் உருவாகும் சிசு ஆணாக, பெண்ணாக பிறப்பதற்கு ஆணின் விந்தணுதான் காரணம் என்பது குர்ஆனில் பல வசனங்களில் மறைமுகமாகவும், தெளிவாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனை பல முறை நாம் படித்துள்ளோம், படித்துக் கொண்டும் இருக்கிறோம். ஆனால், ஆய்வுக் கண்ணோட்டத்தில் அந்த வசனங்களை படித்துப் பார்க்க வில்லை. எனவே, அந்த உண்மைகள் பலரின் கவனத்திற்கு வராமல் போய்விட்டது.

அவர்கள் குர்ஆனை ஆராய்ந்து படிக்க வேண்டாமா? அல்லது அவர்களது இதயங்களில் அதற்குரிய பூட்டுகள் போடப்பட்டுள்ளனவா? என்றும், இந்த குர்ஆனை சிந்தித்துப் படிப்போருக்கு அதில் பல அத்தாட்சிகள் உண்டு என்றும் குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டிருந்தும் இன்று முஸ்லிம்களான நாம் சிந்தித்துப் படிப்பதே இல்லை. அதிலும் வேதனை என்னவென்றால், குர்ஆனின் அரபி எழுத்துக்களையே வாசிக்கத் தெரியாதவர்கள்தான் நம்மில் ஏராளம், ஏராளம். அவர்களால் அதன் பொருளைத்தான் புரிந்து கொள்ள முடியுமா? குர்ஆனை வாசிப்பதற்கே தெரியாத இவர்களால் அதனின் பொருளை அறிந்து, எப்படி ஆய்வுகள் செய்து அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ள முடியும்?.

இன்று மாற்று மதச் சகோதரர்கள் குர்ஆனைப் படித்து, அதில் கூறப்படும் விவரங்களை புரிந்து ஆய்வுகள் நடத்துகிறார்கள். ஆனால் நமது நிலைபாடு என்ன? ஒருவர் வீட்டில் மரணம் விழுந்தால் மட்டுமே பலர் கூடி குர்ஆன் ஓதும் சம்பிரதாயம் நமது சமூகத்தில் வேரூன்றி நிற்கிறது. மற்ற காலங்களில் பட்டுத் துணியில், அல்லது வெல்வெட்டுத் துணியில் துயில் கொள்ளச் செய்து, தூக்கி ஓரம் கட்டி விடுகிறார்கள் நம்மில் பலர். இளவு வீடுகளில் உச்சரிக்கப்படும் மந்திரமாகவே நாம் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். குர்ஆன் உயிருள்ளவர்களை எச்சரிப்பதற்காக அருளப்பட்டது என்ற உண்மையை மறந்து, இந்த இறைமறையையே மரணிக்கச்செய்யும் அவலம் நமது சமூக அமைப்பில் உள்ள வரை உயிரோட்டம் உள்ள சமுதாயமாக நாம் ஒரு போதும் திகழ முடியாது என்பது நிச்சயம். மேலும் வெண்ணையை கையில் வைத்துக் கொண்டு நெய் தேடி அலைந்த கதையைப் போல, அறிவியல் கருவூலத்தை கையில் வைத்துக் கொண்டு, அறிவியல் உண்மைகளை வேறெடங்களில் நாம் தேடி அலைவது வேடிக்கையானதும் வேதனை தரக் கூடியதுமாகும். அறிவியல் உலகில் கண்டுபிடிப்புகள் வெளிப்படும் போதெல்லாம் வாய்பிளந்து நிற்கிறோம். ஆனால் அந்த அறிவியல் உண்மை 1430 ஆண்டுகளுக்கு முன்பே நமது இறைவேதம் குர்ஆனில் சொல்லப்பட்டு விட்டது என்பதை மறந்து விடுகிறோம்.

எனவே, குர்ஆனை ஆய்வு செய்து படியுங்கள். அதில் படிப்பினைகள் பல உண்டு. அறிவியல் உண்மையோ அள்ள அள்ள குறையாமல் நிறைந்து கிடக்கிறது. குர்ஆன் ஒரு முடிவுறா அறிவியல் சுரங்கம். தோண்டத் தோண்ட புதிய புதிய கருத்துகள் புலப்பட்டுக் கொண்டே இருக்கும். எனவே, அன்பு வாசகர்களே! குர்ஆனை படிப்பதற்கென நமது நேரங்களில் கணிசமான அளவு அதற்காக செலவிட வேண்டும். அதில் ஆய்வுகள் பல நடத்த வேண்டும். ஆயுட்காலம் முழுவதும் அல்லாஹ்வின் அருளுக்கு அருகதையானவர்களாக நம்மை நாம் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

கர்பத்தில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தீர்மானிப்பது விந்தணுதான் என்ற உண்மையை குர்ஆனின் வசனங்களை படித்துப் பார்க்கும் யாரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அவ்வளவு எளிமையாக சொல்லப்பட்டிருப்பது குர்ஆனின் அறிவியல் அற்புதங்களில் ஒன்றாகும். இந்த அறிவியல் உண்மையை 1430 ஆண்டுகளுக்கு முன்னால் ஏன் சொல்ல வேண்டும்? அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் அறிவியல் உண்மைகளைப் புரிந்து கொள்ளும் நிலையில் இருந்தார்களா? என்று வரலாற்றை படித்துப் பார்க்கும் போது, வேறொரு பெரிய வாழ்வியல் உண்மை அந்த வசனங்களின் மூலம் உணர்த்தப்படுவது தெரியவரும். அறிவியல் வாடை கூட இல்லாத அம்மக்கள், இந்த உண்மையை புரிந்து கொள்வதற்காக மிக எளிமையாக ஆக்கப்பட்டுள்ள இந்த வசனங்கள், மனிதாபிமானமற்ற கொடுமையான பெண் சிசு வதைகளுக்கு முற்று புள்ளி வைப்பதற்காகத்தான் இந்த உண்மையை அப்போது சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

ஆம்! பெண் குழந்தை பெற்றுத் தந்த தனது மனைவியினை அவள்தான் அதற்கு காரணம் என்று கருதி பல சித்திரவதைகள் செய்து, அவள் பெற்ற குழந்தையை புதை குழியில் புதைத்து வந்த அவர்களுக்கு, குழந்தை பெண்ணாகப் பிறப்பதற்கு ஆண்மகனான நானேதான் காரணம், தன்னிலிருந்து வெளிப்பட்ட விந்தணுவின் மூலம்தான் பெண் குழந்தை படைக்கப்பட்டது என்பதை உணர்த்தும் போது, அந்த குற்ற உணர்வு தன் பக்கம் திரும்பி இது போன்ற கொடுமைகள் நடக்காமல் தடுக்க முடியும். அதனைத் தான் இந்த வசனங்கள் சாதித்தன. வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் இது பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்சான் என்றால் என்ன?

பாலினத்தை தீர்மானிப்பது விந்தணுதான் என்று கூறும் வசனங்களில் சிலவற்றை எடுத்துக் கூறி, அதில் அந்தக் கருத்து எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது என்பதை உங்களது சிந்தனைக்கு முன் வைக்கிறேன்.

خَلَقَ الْأِنْسَانَ مِنْ نُطْفَةٍ

விந்தணுவிலிருந்து மனிதனை (அல்லாஹ்) படைத்தான். அல் குர்ஆன்: 16:4

فَلْيَنْظُرِ الْأِنْسَانُ مِمَّ خُلِقَ . خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ

ஆகவே, மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப் பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்துப் பார்க்கவும். குதித்து வெளியாகும் நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அல் குர்ஆன்: 86:5-6.

முதல் வசனத்தில் நுத்ஃபாவிலிருந்து இன்சான் படைக்கப்பட்டதாகவும், இரண்டாவது வசனத்தில் குதித்து வெளியாகும் நீரிலிருந்து இன்சான் படைக்கப்பட்டதாகவும் கூறப் பட்டுள்ளது. நுத்ஃபா என்பதும், குதித்தும் வெளியாகும் நீர் என்பதும் முறையே ஆணின் விந்தணு, மற்றும் இந்திரியத்தைத்தான் குறிக்கிறது என்பதை முந்திய தொடர்களில் வலுவான ஆதாரத்தின் அடிப்படையில் தெளிவுபடுத்தியுள்ளேன். விந்தணுவிலிருந்துதான் இன்சான் படைக்கப்பட்டான் என்ற உண்மை இந்த இரு வசனத்தின் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

இங்கு இன்சான் என்ற அரபிச் சொல் எந்த பொருளில் பயன் படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு குர்ஆனின் பிரயோகமே நமக்கு பதிலாக அமைகிறது. தமிழில் மனிதன் என்ற வார்த்தையை ஆண், பெண் ஆகிய இரு பாலாரையும் குறிப்பதற்கு நாம் பயன்படுத்துவது போல அரபி மொழியில் இன்சான் என்று வார்த்தை குறிப்பிடப்படும். குர்ஆனில் சுமார் 59 முறை இன்சான் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு, அதன் தொடரில் இன்சான் செய்ய வேண்டிய சில கடமைகளும், வேறு சில செய்தித் துளிகளும் சொல்லப்பட்டுள்ளன. அந்தக் கடமைகள் ஆண்கள் மீது மட்டுமல்ல, மாறாக பெண்கள் மீதும் விதியாக்கப்பட்டதாகும். மேலும் அந்த இன்சான் குறித்து சொல்லப்பட்ட செய்திகள் ஆண்கள் விஷயத்தில் எவ்வளவு பொருத்தமானதாக இருக்கிறதோ, அதே போல பெண்களுக்கும் பொருந்தி வரும் செய்திகளாகவே உள்ளன என்பதற்கு பின் வரும் வசனம் சான்றாக இருப்பதைக் கவனியுங்கள்:

وَوَصَّيْنَا الْأِنْسَانَ بِوَالِدَيْهِ إِحْسَاناً حَمَلَتْهُ أُمُّهُ كُرْهاً وَوَضَعَتْهُ كُرْهاًوَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلاثُونَ شَهْراً

மேலும், தனது பெற்றோர்க்கு நன்மை செய்யுமாறு மனித(இன்சா)னுக்கு நாம் உபதேசம் செய்தோம், அவனுடைய தாய், சிரமத்துடன் அவ(இன்சா)னைச் சுமந்திருந்து, சிரமத்துடன் அவ(இன்சா)னைப் பிரசவிக்கின்றாள், (அவள்) கர்பத்தில் அவ(இன்சா)னைச் சுமப்பதும், அவ(இன்சா)னுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும்.
அல் குர்ஆன்: 46:15.

பெற்றோருக்கு நன்மை செய்யும் படி மனித(இன்சா)னுக்கு உபதேசம் செய்ததாக இறைவன் கூறுகிறான். இது ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல, பெண்களும் தங்களது பெற்றோருக்கு நன்மைகள் செய்ய வேண்டும். அது போல் ஒரு தாய் குழந்தையை கர்பத்தில் சுமந்திருப்பதும், அதற்கு பால் குடி மறக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும் என இந்த தொடரில் சொல்லப்பட்ட செய்தித் துளி ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல. பெண் குழந்தைக்கும் அதே கால அளவுதான். எனவே, இன்சான் என்ற வார்த்தை ஆண், பெண் ஆகிய இரு பாலாரையும் குறிக்கப் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும் என்பது இந்த வசனத்தின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

இந்த உண்மையை தெரிந்து கொண்டதற்குப் பிறகு மேலே கூறப்பட்ட இறைவசனத்தை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். ஆண், பெண் என படைக்கப்படுவதற்கு ஆணின் விந்தணுதான் காரணம் என்ற உண்மை மிக எளிதாக புரியவரும்.

وَاللَّهُ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ جَعَلَكُمْ أَزْوَاجاً وَمَا تَحْمِلُ مِنْ أُنْثَى وَلا تَضَعُ إِلَّا بِعِلْمِهِ

மேலும், அல்லாஹ் உங்களை (துவக்கத்தில்) மண்ணிலிருந்து படைத்தான், பின்னர் விந்தணுவிலிருந்து – (ஆண்-பெண் கொண்ட) ஜோடிகளாக ஆக்கினான். எந்தப் பெண்ணும் கர்பமடைவதும், பிரசவிப்பதும் அல்லாஹ் அறியாமல் நடைபெறுவதில்லை. அல் குர்ஆன்: 35:11.

இந்த வசனத்தில் இன்னும் சற்று தெளிவாகவே இந்த உண்மை விவரிக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். அதாவது உங்களை விந்தணுவிலிருந்துதான் படைத்தான், அந்த விந்தணுவின் மூலம்தான் ஆண், பெண் கொண்ட ஜோடிகளையும் உருவாக்கினான். இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள உங்களை என்ற அர்த்தத்திற்கு பயன் படுத்தப் பட்டுள்ள அரபி வார்த்தை ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் குறிக்கும் வார்த்தையாகும்.

இந்த வசனத்தின் தொடரில் பெண்கள் கர்ப்பம் அடைவது பற்றிய செய்தியை குறிப்பதற்கு சுமத்தல் எனும் பொருளுடைய தஹ்மிலு என்ற வார்த்தை பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. அதிலும் ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது. அதாவது பெண் என்பவள் ஆணிடமிருந்து உற்பத்தியாகி வரும் சிசு, அது எதுவாக இருந்தாலும் அதை சுமப்பவள்தான். அவள் குழந்தையை உற்பத்தி செய்பவள் அல்ல என்ற உண்மையும் மறைந்திருக்கிறது.

وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَى مِنْ نُطْفَةٍ إِذَا تُمْنَى

அல்லாஹ்தான் (கர்பறையில்) செலுத்தப்படும் விந்தணுவிலிருந்து (உங்களை) ஆண் பெண் ஜோடிகளாகப் படைத்தான். அல் குர்ஆன்: 53:45,46.

أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَى . ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّى . فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَى

(கர்பத்தில்) செலுத்தப்படும் இந்திரியத்தில் உள்ள ஒரு விந்தணுவாக அவன் இருக்கவில்லையா?

பின்னர் அவன் அலகத்தாக (இது குறித்து பின்னர் விவரிக்கப்படும்) இருந்தான். பின்னர் அவனைப் படைத்து செம்மையாக்கினான்.

பின்னர் இந்திரியத்திலிருந்து ஆண், பெண் என்ற ஜோடிகளைப் படைத்தான். அல் குர்ஆன்: 75:37,38,39.

இந்த இரு வசனமும் ஐயத்திற்கு இடமின்றி, ஆண், பெண் என்பது ஆணின் விந்தணுவிலிருந்துதான் படைக்கப்படுகிறது என்ற உண்மையை 1430 ஆண்டுகளாக இந்த உலகிற்கு மிகத் தெளிவாகவே அதே நேரத்தில் யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறன்றன. இந்த உண்மையை அறிவியல் உலகம் மிகத்தாமதமாக தற்போதுதான் கண்டுபிடித்திருக்கிறது. குர்ஆன் விஞ்ஞானத்தையும் போதிக்கும் அற்புத வேதம் என்பதை இனிமேலாவது இந்த உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நமது ஆவல்.

நபி மொழியில் முரண்பாடா?

பாலைத் தீர்மானிப்பது விந்தணுதான் என்பதை திருமறையில் இடம் பெற்ற பல வசனங்களின் மூலம் அறிந்து கொண்ட நாம், இது குறித்து வந்திருக்கும் ஒரு நபி மொழியினை படித்துப் பார்க்கும் சந்தர்பம் ஏற்படலாம். அப்போது அந்த நபி மொழி குர்ஆனுக்கு எதிரான மாற்று கருத்தினை வலியுறுத்துவது போன்று தோன்றலாம். எனவே, அந்த நபி மொழியையும், அதற்கு சரியான விளக்கம் என்ன என்பதையும் அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.



குழந்தைகளும் கணனியும்





இது கணனி, இணைய யுகம். கல்வி, பொருளாதாரம், அரசியல் அனைத்துத் துறைகளையும் அது தன்வயப்படுத்திக் கொண்டு விட்டது. இன்றைய உலகில் கணனி தொழில்நுட்பமானது அனைத்துத் துறைகளையும் பாரிய வளர்ச்சிக்கும் இட்டுச்சென்றுள்ளது. ஒரு காலத்தில் மாணவர்களின் மேற்படிப்புக்காகவே கம்யூட்டர் கல்வி பயன்பட்டது. ஆனால் கையடக்கத் தொலைபேசி, வானொலி, இணையம் வந்துவிட்டதால் குழந்தைப் பருவத்திலிருந்தே கணனிக் கல்வி அவசியமாகப் படுகின்றது. இனியும் நாம் இதிலிருந்து ஒதுங்கியிருப்பதானது நம்மை உலக அரங்கிலிருந்து காட்டுவாசிகள் நிலைக்குத் தள்ளிவிடும்.
இதனால் சிறுவயதில் கணனியைப் பாவிப்பதற்கு குழந்தைக்குப் பெற்றோர் உதவி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. எந்தெந்த வயதுகளில் எவ்வகையான பாவனை முறைகளை குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்? அவை எவ்வகையான நன்மைகளை தங்கள் குழந்தைக்கு பெற்றுத்தரும் என்பன போன்ற விபரங்களை பெற்றோர் அறிந்திருந்பதும் அவசியமாகும்.
தங்களுக்கு தேவையான தகவல்களைச் சேகரித்தல், அவற்றை ஆராய்ந்து முடிவுகளை மேற்கொள்ளுதல், பாட, உப பாடவிதானத்திற்கான விடயங்களைப் பெறுதல், எதிர்கால வேலைவாய்ப்புக்கான கணனி தகைமைகளை பெறுவதற்கான சரியான அடித்தளத்தை இடுதல் போன்ற பல நன்மைகளை கணனி தொழில்நுட்பம் குழந்தைக்கு வழங்குகின்றது. கற்றலில் உதவி செய்கின்ற ஒரு ஊடகமாகவும் இது விளங்குகின்றது.
இந்த இடத்தில் பெற்றோராகிய நாம் ஒன்றை அவசியம் புரிந்து கொள்ள வேண்டும். கணனி தொழில்நுட்பமானது கல்விக்கு, பூகோலமய வாழ்க்கைக்கு உறுதுணையாக அமையுமே தவிர ஒரு சிறந்த மாணவனை, மாணவியை உருவாக்குவதற்கு இதுமட்டும் போதாது. வெளியுக செயற்பாடுகள், நல்ல நண்பர்கள், சிறந்த குடும்பம், முறையான கல்வி போன்ற பல காரணங்கள் ஒரு குழந்தையுடைய ஆரோக்கியமான உளவளர்ச்சியினை தீர்மானிக்கின்றன. சமூகத்தொடர்பற்ற கம்பியூட்டர் பூச்சியாக மாற்றாமல் அளவோடு அதனை பாவிப்பதுடன் சமூகத் தொடர்பாடல்களில் ஈடுபடுவதும் முக்கியமாகும்.
குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியில் முழுக்குடும்ப அங்கத்தவர்களுக்கும் பொறுப்பு இருப்பதை மறுக்க இயலாது. குழந்தைகளின் நடவடிக்கைகளில் பங்கு கொண்டு சரியான முறையில் வழிநடாத்தி அவர்களை உற்சாகமூட்டும் போது தான் அவர்கள் தமது அறிவை விரைவாகவும் நல்லமுறையிலும் வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரு குழந்தையினுடைய கல்விச் செயற்பாடுகளில் பங்குகொள்வதற்கு கணனித் தொழில்நுட்பம் வழிவகுக்கின்றது. அவர்கள் கணனிச் செயற்பாடுகளில் ஈடுபடும் போது பெரியவர்களும் பங்கு கொள்வது சுவாரசியமானதாகும்.
குழந்தைக்கு எந்த வயதில் கம்பியூட்டர் பாவனை முறையை அறிமுகப்படுத்துவது? எவ்வாறான கம்பியூட்டர் செயற்பாடுகள் சிறந்தவை? இணையத்தளத்தை ஆரோக்கியமாக கையாள்வது எப்படி? போன்ற பல கேள்விகள் பெற்றோர் மனங்களில் எழுவது இயல்பானது. இது தொடர்பான முறையான ஆய்வுகள் பெரிதாக மேற்கொள்ளப்படவில்லையாயினும் இத்துறையில் நிபுனத்துவம் பெற்றவர்கள் நல்ல ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் சிபாரிசு செய்கின்றனர். ஆனால் இவ்வாலோசனைகளை நடைமுறைப்படுத்த முன்னால் சில விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டும்.
  1. ஒவ்வொரு குழந்தையும் அடுத்த குழந்தையிலிருந்து (வளர்ச்சியிலும் முதிர்ச்சியிலும்) வித்தியாசப்படுகின்றது. எனவே பெற்றோர் தமது குழந்தையின் உணர்வையும் ஆற்றலையும் சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப கணனித் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது அவசியமாகும்.
  2. குழந்தை கணனி கற்பது ஏனைய இலக்குகளைவிட மிக உன்னதமான இலக்காகக் கருதக்கூடாது. உதாரணமாக ஒரு குழந்தை 15 மாதத்தில் நடக்க ஆரம்பி்க்க வேண்டும். இதைப் போல கணனியும் கற்பதையும் நோக்கக் கூடாது.
  3. கணனி உபயோகிப்பது சமூகங்களிலிருந்து அந்நியமாதல் ஒரு பிரச்சினையாக மாறியிருக்கிறது. மனித உறவு, சமூகத்தொடர்பாடல் என்பதைத் துண்டித்த ஒன்றாக கணனிக் கல்வியை குழந்தைகளுக்கு ஊட்டக்கூடாது. அதாவது முழுநேரமும் குழந்தையை கணனியில் மூழ்கவிடக் கூடாது.
  4. இரண்டு வயதுக்குற்பட்ட குழந்தைகளுக்கு அருகில் ரேடியேசன் பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது என மருத்துவர்கள் கூறுவதை கவனத்தில் எடுக்க வேண்டும்.
இப்போது எந்த வயதில் எந்த வகையான கணனிப் பாவனை முறைகளை அறிமுகப்படுத்தலாம் என்பதை நோக்குவோம்.
2 வயது தொடக்கம் 3 வயது வரை
இவ்வயதுகளில் கணனி பாவனை முறையை அறிமுகப்படுத்த வேண்டியதில்லை ஆனால் பெற்றோரும் ஏனைய குடும்ப அங்கத்தவர்களும் கணனியை உபயோகிக்கும் போது அதனை அவதானிப்பது குழந்தைக்கு போதுமானதாகும்.
பெற்றோர் செய்யக்கூடியவை :
  • நீங்கள் கணனியைப் பாவிக்கும் போது உங்கள் குழந்தையை மடியில் வைத்திருக்கலாம்.
  • குழந்தையின் கையின் மீது உங்கள் கையை வைத்து Mouse ஐ இயக்குவதன் மூலம் அது எவ்வாறு தொழிற்படுகின்றது எனக் காட்டலாம்.
  • குழந்தைகள் பொருட்களுடன் விளையாடுவதற்கு விருப்பமுடையவர்கள். எனவே Keyboard இல் எவ்வாறு எழுத்துகளை, கட்டளைகளை அழுத்துவது எனச் சொல்லிக்கொடுக்கலாம்.
  • குழந்தைகள் கணனியைப் பாவிப்பது போன்ற காட்சிகள் உள்ள புத்தகங்கள், வீடியோ காட்சிகளை குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம். இது அவர்களுக்கு கணனி பாவனையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதுடன் உற்சாகத்தையும் அளிக்கும்.
4வயது தொடக்கம் 7வயதுவரை
இவ்வயதுகளில் கணனி பாவனையானது தீவிர முக்கியத்துவம் உடையதல்ல. எனினும் கல்வி சம்பந்தப்பட்ட மென்பெருட்கள் மற்றும் கணனி விளையாட்டுக்களை பாவிக்கக் கற்றுக் கொடுக்கலாம். 6 அல்லது 7 வயதுடையவர்கள் இணையத்தை பெற்றோர்களின் உதவியுடன் உபயோகிக்கத் தொடங்கலாம். இவர்கள் குழந்தைகளுக்கான Web பக்கங்களை பயன்படுத்தலாம். இவ்வாறான பாவிப்புக்களின் போது பெற்றோர் இணையத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் கற்றுக் கொடுக்கலாம்.
பெற்றோர் செய்யக் கூடியவை :
  • உங்களுக்கு இயலுமானவரை குழந்தைகளின் கணனிப் பாவனை நேரங்களில் உடனிருங்கள்.
  • உங்கள் அனுபவங்கள் வாயிலாக நல்ல பழக்கவழக்கங்களையும் ஒழுங்கு முறைகளையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.
  • குழந்தைகளுடைய சின்னச் சின்ன ஆர்வங்களை தட்டிக் கொடுங்கள். உதாரணமாக அவர்கள் கணனியில் வரைந்த படமொன்றை பிரதி எடுத்து அவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் அவர்களை மகிழ்வியுங்கள்.
  • குழந்தைகள் ஈமெயில் பாவிப்பார்களாயின் அந்த ஈமெயிலை நீங்களும் பாவிப்பதன் மூலம் எவ்வாறு ஈமெயில் எழுதுவது, எவ்வாறு பதிலனுப்புவது போன்ற விடயங்களைச் சொல்லிக் கொடுங்கள்.
  • பொரும்பாலான பாடசாலைகள் தங்களுக்கான வெப் பக்கங்களைக் கொண்டிருக்கின்றன. ஆசிரியர்களுடன் ஈமெயில் மூலமாகத் தொடர்பு கொள்ளக்கூடிய சாத்தியங்களும் உண்டு. இவ்வாறான வசதிகளைக் கண்டறிவதன் மூலம் குழந்தையின் பாடசாலைச் செயற்பாட்டில் கூடுதலாகப் பங்கு கொள்ளலாம்.
  • நூலகர்கள், ஆசிரியர்கள் போன்றோருடன் கலந்துரையாடுவதன் மூலம் பெற்றோர் தொடர்பான சஞ்சிகளைகளை வாசிப்பதன் மூலமும் எவ்வாறு கணனியை குழந்தைகளின் தேவைகளுக்காக ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தலாம் எனக் கலந்துரையாடுங்கள்.
8 வயது தொடக்கம் 11 வயது வரை
இந்த வயதினர் கணனியையும் இணையத்தையும் அதிக அளவில் உபயோகிக்க அனுமதிக்கலாம். இணையத்தை பாடசாலைத் தேவைகளுக்காக உபயோகிக்கலாம். உதாரணமாக படங்களைப் பெறுவதற்கும் கலைக்களஞ்சியங்களைப் பார்ப்பதற்கும் பயன்படுத்தலாம். மற்றும் நண்பர்கள் உறவினர்களுடன் ஈமெயில் தொடர்புகளையும் ஏற்படுத்த ஆரம்பிக்கலாம்.
இந்த வயதுக் குழந்தைகள் சுதந்திரமாக சிந்திக்கவும் செயற்படவும் ஆரம்பிக்கிறார்கள். ஆகவே அவர்களை உன்னிப்பாக அவதானிப்பதுடன் சரியான ஒழுங்கு முறைகளையும் நடத்தைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
பெற்றோர் செய்யக்கூடியவை :
  • இணைய, கணனிப் பாவனை பற்றிய சரியான விதிமுறைகளை குழந்தைக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவற்றை மீறினால் ஏற்படக்கூடிய தீமைகள் பற்றியும் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
  • பெரும்பாலான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கணனி விளையாட்டு மென்பொருள் உற்பத்தியாளர்கள் இவ்வயது குழந்தைகளையே தமது நுகர்வோராகக் கொண்டுள்ளனர். எனவே எக்கச்சக்கமான கவர்ச்சியான விளம்பரங்களால் குழந்தைகள் ஈர்க்கப்படலாம். இணையம் மூலமாக இவ்வகையான பொருட்களையும் வாங்கவும் வசதிகள் உள்ளன. உங்கள் அனுமதியின்றி இணையம் ஊடாக பொருட்களை வாங்க அனுமதிக்க வேண்டாம். அத்துடன் உங்களது தொலைபேசி பில்லையும் கிரடிற்காட் பில்லையும் கவனமாக சரிபாருங்கள்.
  • கணனி பாவைனை நேரம் அதிகரித்தால் குழந்தையின் வெளியுலக / சமூக செயற்பாடுகளைக் குறைக்கும். ஆகவே கணனி பாவிப்பதற்குரிய நேரத்தை வரையறை செய்யுங்கள்.
12 வயது தொடக்கம் 14 வயதுவரை
இந்த வயதுக் குழந்தைகள் இணையத்தின் முழுமையான பயனையும் பெறத்தொடங்களாம். பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகள், கட்டுரைகள் என்பற்றை வாசிக்கலாம். இவ்வயது குழந்தைகளில் பெரும்பாலானோர் இன்டநெற் Chat எனப்படுகின்ற மற்றவர்களுடன் உரையாடிக் கொள்ளும் முறையை பாவிக்கின்றனர். இவர்களுக்குரிய நல்ல Chat சோவைகளை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. இதன் மூலமாக தங்களுக்கு ஒத்த விருப்பு வெறுப்புக்களைக் கொண்ட பலருடன் அவர்கள் தொடர்பு கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
பெற்றோர்கள் செய்யக்கூடியவை
  • இந்த வயதுப்பிள்ளைகள் தாமாகவே விடயங்களை அறியமுற்படுவர். நல்ல ஆலோசனைகளையும் வரையறைகளையும் அவர்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும்.
  • அவர்களுடைய இணைய பாவனையின் போது அருகில் இருக்க முயற்சி செய்யுங்கள். இது மிகவும் கடினமான காரியம் எனினும் மிகவும் அவசியமானது. அருகில் இருக்க முடியாவிட்டால் நீங்கள் அடிக்கடி நடக்கக்கூடிய பொதுஅறையில் கணனியை வைக்க வேண்டும்.
  • இணைய உலகில் பல சட்டதிட்டங்கள் உள்ளன. அவ்வாறான சட்டதிட்டங்களையும் அவற்றை மீறினால் வரும் விளைவுகளையும் அவர்களுக்குக் கூறுங்கள்.
  • எந்தெந்த Chat கள் பிள்ளைகளுக்கு பொருத்தமானவை எனக்கண்டிறிந்து அவர்களுக்குத் தெரிவியுங்கள். அத்துடன் அதில் எவ்வளவு நேரத்தை செலவளிக்கலாம் என்பதையும் வரையறை செய்யுங்கள்.
  • கணனியின் இயக்கத்தை சீர்குலைக்கும் வைரஸ் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க மேற்கொள்ள வேண்டிய அறிவுறுத்தல்களை வழங்குங்கள். வீட்டில் எல்லோரும் உபயோகிக்கும் பொதுவான கணனியாயின் இதனை நடைமுறைப்படுத்துவது முக்கியமானது. இணையத்தளங்கள், Flash Drive போன்றவற்றின் மூலம் பரவும் வைரஸ்களின் தீங்கை எழுத்துக்கூறி அவற்றை பாதுகாப்பாக கையாளும் நடைமுறையையும் காண்பிக்க வேண்டும்
  • இணையத்திலிருந்து நல்ல கணனி விளையாட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அநேகமானவை குழந்தைகளுக்குப் பொருத்தமானவையாக இருந்தாலும் சில அளவுக்கு மீறிய வன்முறைத்தன்மை கொணடவை. இது தொடர்பாக குழந்தைகளுக்கு தெளிவாக விளக்குவதுடன் அவர்கள் விளையாடுவதை நீங்களும் பார்க்க வேண்டும்.
15 வயது தொடக்கம் 18 வயது வரை
இந்த வயதுப்பிள்ளைகளுக்கு இணையம் ஒரு ஆசிரியரைப் போன்றதாகும். கல்வி சம்பந்தப்பட்ட தேடல்கள், பொதுஅறிவு மற்றும் உலக நடப்புகளைத் தெரிந்து கொள்வதற்கும் அராய்வதற்கும் இணையம் இவர்களுக்குப் பெரும் துணை புரிகின்றது. தங்களுடைய மேற்படிப்பைத் தொடர்வதற்கு எவ்வகையான துறையை தேர்ந்தெடுப்பது, எந்தப் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகள் சிறந்தவை போன்ற சிக்கலான விடயங்களைத் தீர்ப்பதற்கு இணையத்தின் துணை தேவைப்படுகின்றது. இவ்வயதினர் அதிகநேரத்தை இணையத்தில் செலவளிக்க வேண்டியிருக்கும்.
பெற்றோர் செய்யக்கூடியவை
  • உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் குடும்பத்தினருக்குத் தேவையான சிலவிடயங்களைக் கொடுத்து அவை பற்றி இணையத்தில் ஆராய்ந்து சொல்லுங்கள். உதாரணமாக விடுமுறைச் சுற்றுலா ஒன்றுக்குச் செல்வதற்கு முன் இடத்தைத் தேர்ந்தெடுத்தல். ஒரு பொருளை வாங்க முதல் அதுபற்றிய ஆய்வுகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். பின்னர் அவர்களின் ஆய்வு முடிவுகள் பற்றி ஒன்றாக அமர்ந்து விவாதியுங்கள். இவ்வாறு குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றாக அமர்ந்து விவாதிப்பது அவர்களது ஆய்வை மேம்படுத்த உதவும்.
  • உங்கள் பிள்ளைகள் கணனிப்பாவனையுடன் வெளியுலகச் செயற்பாடுகளையும் சரியான விகிதத்தில் மேற்கொள்கிறார்களாக என அவதானியுங்கள். இவற்றோடு அதான், கிராஅத் போன்றவற்றிற்கு கணனியைப் பயன்படுத்தவைக்கலாம்.
  • உங்கள் பிள்ளைகள் கணனியை கற்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அவர்களை ஊக்குவிப்பதுடன் சரியான திசையில் அவர்களை வழிநடாத்துங்கள்.
  • உங்கள் பிள்ளை கவிதை, கதை, கட்டுரை, ஓவியம் வரையக்கூடிய திறன் இருந்தால் அவற்றை வளர்ப்பதற்கும் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்துவதற்குமான ஒரு இணையத்தளத்தை உருவாக்குவதற்கு வழிகாட்டுங்கள்.
ஆரம்பப் பாடசாலைகளில் ஆண், பெண் குழந்தைகளின் கணனிப்பாவனை அதிக வேறுபாடு இல்லை. ஆனால் வயது ஏற ஏற கணனி உலகமானது பெரும்பாலும் ஆண்பிள்ளைகளைச் சார்ந்தே இயங்குகின்றது. உதாரணமாக கணனி விளையாட்டினைக் குறிப்பிடலாம். இதன் காரணமாக பெண் குழந்தைகளின் கணனி ஆர்வம் மெதுமெதுவாகக் குறைகின்றது. பாடசாலைத் தேவைகளுக்கு ஆண்பிள்ளைகளை விட பெண்பிள்ளைகள் அதிகமாக கணனி பாவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இன்றைய உலகின் வேலைவாய்ப்பானது பெரும்பாலும் கணனியைச் சார்ந்தே நிர்ணயிக்கப்படுகின்றன. சர்வதேச மொழிகளில் ஏதாவது ஒன்று குழந்தைக்குத் தெரியுமாக இருந்தால் ஈகொமர்ஸ் என்ற துறையிலிருந்தே உங்கள் குழந்தை வேலைவாய்ப்பைப் பெறமுடியும். கணனித் தொழில்நுட்பத்தில் ஆண் பெண் வேறுபாடின்றி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகின்றது. எனவே பெற்றோர் ஆண் பெண் பாகுபாடு காட்டாது கணனிக் கல்வி வழங்குவது அவசியமாகும்.

முஸ்லிம்களின் மோசமான எதிரி, முஸ்லிம்களே!


எழுதியவர்/பதிந்தவர்/உரை பிற ஆசிரியர்கள்

by Dr. Paul Craig Roberts
கட்டுரையாளர், டாக்டர் பவுல் கிரேக் ராபட்ஸ் அவர்கள், அமெரிக்க கருவூலத்தின் (Treasury) முன்னாள் பிரதிச் செயலர், 'வால்ஸ்ட்ரீட்' பத்திரிகையின் கூட்டு ஆசிரியர், ஹூவர் கலாசாலையிலே ஒரு ஆராய்ச்சியாளர், அரசியற் பொருளாதார விரிவுரையாளர்.
முஸ்லிம்களோ சனத்தொகையில் மிக அதிகம். ஆனால், அவர்களுக் கிடையேயான பிரிவினையோ அதைவிட அதிகம். மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் ஸியா, சுன்னாப் பிளவுகள் இதற்கோர் நல்ல உதாரணம். இவர்கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மேற்கத்திய நாடுகளுக்கு அடிமைப் பட்டுக்கிடப்பதற்குக் காரணமும் இந்தப்பிரிவினைதான். ஏப்ரலில் நடக்கவிருந்து, நிறுத்தப்பட்டுப்போன 'இஸ்லாமிய ஒருமைப்பாட்டு (ஒலிம்பிக் போன்ற) விளையாட்டுகள்' மற்றுமொரு உதாரணமாகும். இங்கு காணப்படும் குடாக்கடலுக்கு எந்தப்பெயரை நிரந்தரமாக்குவது என்பதில்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஈரானியர் 'பாரசீக வளைகுடா' என்கிறார்கள், அரேபியர் 'அராபிய வளைகுடா' என்கிறார்கள்.